
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள களக்காடு மூணாற்று பிரிவு சுடுகாட்டில் மூதாட்டி ஒருவர் கட்டிலில் அமர்ந்திருந்தார். இதனை பார்த்த பொதுமக்கள் மூதாட்டியிடம் விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர் சிதம்பரபுரம் வடக்கு தெருவில் வசிக்கும் இசக்கியம்மாள்(80) என்பது தெரியவந்தது. இந்த மூதாட்டி அவரது மகன் கந்தசாமி பராமரித்து வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு கந்தசாமியும் இறந்து விட்டார்.
இதனால் கந்தசாமியின் 2 மனைவிகளும் இசக்கியம்மாளை பராமரித்து வந்தனர். இந்நிலையில் இசக்கியம்மாளை அவரது உறவினர்கள் கட்டிலுடன் லோடு ஆட்டோவில் ஏற்றி கக்கன் நகர் 3-வது பிரிவில் இருக்கும் சுடுகாட்டில் விட்டு சென்றது தெரியவந்தது. இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற சப்-இன்ஸ்பெக்டர் இசக்கி மூதாட்டியை ஆட்டோவில் ஏற்றி மீண்டும் அவருடைய வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார்.
அப்போது உறவினர்கள் மூதாட்டியை ஏற்க மறுப்பு தெரிவித்தனர். இது குறித்து அறிந்த ஊர் மக்கள் நாங்கள் தினமும் ஊதாட்டிக்கு உணவு அளித்து எங்கள் குடும்பத்தாரை போல கவனித்துக் கொள்கிறோம் என வாக்குறுதி அளித்தனர். அதன் பிறகு போலீசார் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.