தர்மபுரி மாவட்டத்தில் உள்ள செந்தில் நகர் வி.பி சிங் தெருவில் இன்ஜினியரான வினிதா என்பவர் வசித்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு வினிதாவின் செல்போன் எண்ணிற்கு ஒரு குறுந்தகவல் வந்தது. அதில் கமிஷன் அடிப்படையில் வேலைவாய்ப்பு வழங்கப்படும் என குறிப்பிட்டு இருந்தது. அதிலிருந்த செல்போன் எண்ணை வினிதா தொடர்பு கொண்டு பேசியுள்ளார். மறுமுனையில் பேசிய நபர் பணத்தை முதலீடு செய்தால் அதிக கமிஷன் கிடைக்கும் என ஆசை வார்த்தைகள் கூறினார்.
இதனை நம்பி தனது தந்தையின் வங்கி கணக்கிலிருந்து அந்த நபர் கூறிய வங்கி கணக்கிற்கு வினிதா 5 லட்சத்து 20 ஆயிரத்து 294 ரூபாய் அனுப்பி வைத்துள்ளார். ஆனால் கூறியபடி அவருக்கு கமிஷன் தொகை அனுப்பி வைக்கப்படவில்லை. ஏற்கனவே கொடுத்த பணமும் திரும்பி வரவில்லை. இதனையடுத்து மேலும் 3 லட்சத்து 52 ஆயிரம் ரூபாய் கொடுத்தால் ஏற்கனவே அனுப்பிய பணம், அதற்கான கமிஷன் தொகை முழுமையாக கிடைக்கும் அந்த நபர்கள் கூறினர். இதனால் அதிர்ச்சியடைந்த வினிதா தர்மபுரி சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.