தமிழகத்தில் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும், இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் வசிப்பவர்களுக்கும் பொங்கல் பரிசு தொகை வழங்கப்பட உள்ளது. இவர்களுக்கு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு ஆகியவை வழங்க இருக்கிறது. இவை அனைத்தும் வருகிற 9ம் தேதி முதல் நியாய விலை கடைகளில் வழங்கப்படுகிறது. தமிழகம் முழுவதும் 2.20 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு இந்த பொங்கல் தொகுப்பு பரிசு வழங்க இருக்கிறது. அதனால் கூட்ட நெரிசலை தவிர்க்க இன்று முதல் வீடுகளுக்கு டோக்கன்கள் வழங்கும் பணி தொடங்கியுள்ளது.

அந்தந்த ஏரியாவில் உள்ள நியாயவிலை கடை ஊழியர்கள் இந்த டோக்கனை வழங்கி வருகின்றனர். அதில் எப்போது பொருள்களை வாங்க வர வேண்டும் என்பதை குறிப்பிட்டு எழுதிக் கொடுக்கின்றனர். டோக்கன் வழங்கும் பணி 4 நாட்களுக்குள் முடிந்து, தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று நியாய விலைக் கடை ஊழியர்களுக்கு அதிகாரிகள் உத்தரவு அளித்துள்ளனர். இதற்கிடையில் இந்த பரிசு தொகுப்பை விநியோகம் செய்வது தொடர்பாக தலைமைச் செயலகத்தில் அதிகாரிகளுடன் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி ஆலோசனை நடத்தினார்.

அப்போது அவர் நியாய விலை கடைகளில் வழங்கப்படும் கரும்பு தோகையை வெட்டாமல் முழுமையாக வழங்க வேண்டும் என்றும் தரமான பச்சரிசி சக்கரை வழங்குவதை உறுதிப்படுத்த வேண்டும் என்று அதிகாரிகளுக்கு வலியுறுத்தினார் இதற்கிடையில் பொங்கல் பரிசு தொகுப்புக்கு டோக்கன் வழங்குவதற்கு பதிலாக செல்போனில் குறுஞ்செய்தி அனுப்ப அரசு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று நியாய விலை கடை பணியாளர்கள் சங்கம் அரசு கோரிக்கை வைத்துள்ளது. இதன் மூலம் நியாயவிலை கடை ஊழியர்களுக்கு அலைச்சல் மிச்சமாவது மட்டுமின்றி கடைகளில் பொருள்கள் வழங்குவதை நிறுத்திவிட்டு வெளியே செல்வது தவிர்க்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளனர்