சேலம் மாவட்டத்தில் உள்ள ஓமலூர் அருகே பெரிய காடம்பட்டி கிராமத்தில் வசித்து வருபவர் சிவப்பிரகாசம். இவர் அப்பகுதியில் நெசவுத் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். மேலும் இவர் அப்பகுதியில் பாம்பு பிடிக்கும் தொழிலையும் செய்து வந்துள்ளார். இந்நிலையில் தாரமங்கலத்தில் பாம்பு பிடிக்க சிவப்பிரகாசம் சென்றுள்ளார்.

அங்கு ஒரு மரக்கட்டையின் உள் கண்ணாடி விரியன் பாம்பு ஒன்றை பிடிக்க சென்றபோது, எதிர்பாராத விதமாக பாம்பு சிவப்பிரகாசத்தை கடித்து விட்டது. இதனை அடுத்து உடனடியாக சிவப்பிரகாசம் பாம்பை பிடித்து பையில் போட்டுக்கொண்டு ஓமலூர் அரசு மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.

அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. அதன்பின் மேல் சிகிச்சைக்காக சிவப்பிரகாசம் சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார். அங்கு பாம்புடன் வந்த சிவப்பிரகாசத்தை பார்த்து மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதனால் மருத்துவமனைக்குள் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

அதன் பின் பாம்பை மருத்துவமனைக்கு வெளியே வைத்துவிட்டு சிவப்பிரகாசம் மட்டும் மருத்துவமனைக்குள் அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து பாம்பை மீட்டு வனப்பகுதியில் பாதுகாப்பாக விட்டனர்.