
நெல்லை புதிய பேருந்து நிலையம் பகுதியில் ‘ஜல்’ நீட் அகாடமி என்ற தனியார் பயிற்சி மையத்தை கேரளாவை சேர்ந்த ஜலாலுதீன் அகமது என்பவர் நடத்தி வருகின்றார். மேலும் அவர் அந்த மையத்தில் பயிற்சியாளராகவும் செயல்பட்டு வந்துள்ளார். இவர் பயிற்சி மையத்திற்கு வரும் மாணவர்களை பிரம்பால் சரமாரியாக தாக்கியதாகவும், மாணவிகள் மீது காலணியை தூக்கி வீசியும் உள்ளார்.
இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளத்தில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் மாணவர்கள் இது குறித்து பெற்றோர் மற்றும் மாவட்ட குழந்தைகள் நல அலுவலகம் சார்பில் மேலப்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்தப் புகாரின் பேரில் காவல்துறையினர் ஜலாலுதீன் அகமது மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதனை அறிந்த அவர் உடனடியாக கேரளாவிற்கு சென்று தலைமறைகி விட்டார்.
இந்நிலையில் நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் உத்தரவின் பெயரில் அவரை கண்டுபிடிக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளனர். இதற்கு இடையே சர்ச்சையில் சிக்கிய அந்த அகாடமியின் விடுதியில் சமூக நலத்துறையினர் மற்றும் வருவாய் அதிகாரிகள் சோதனை நடத்தியதில் உரிய அனுமதி பெறாமல் விடுதி செயல்பட்டு வந்தது தெரிய வந்தது. ஆகையால் இந்த அகாடமியின் விடுதி தற்போது மூடப்பட்டுள்ளது.