சென்னை மாவட்டத்தில் உள்ள எம்.ஜி.ஆர் நகர் கன்னியம்மன் கோவில் தெருவில் வசிக்கும் நிஷாந்த் தேனாம்பேட்டையில் இருக்கும் அலுவலகத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். கடந்த 5 மாதங்களுக்கு முன்பு நிஷாந்த் அப்ரினி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். நேற்று முன்தினம் நிஷாந்த் தனது நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்திவிட்டு கே.கே நகர் பகுதியில் இருந்து மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார்.

இந்நிலையில் ஜாபர்கான்பேட்டை காசி தியேட்டர் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்ட போலீசார் நிஷாந்தை தடுத்து நிறுத்தி விசாரித்தனர். அப்போது நிஷாந்த் மது போதையில் இருந்தது தெரியவந்தது. இதனால் போலீசார் அவர் மீது வழக்குபதிந்து மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்து, பத்தாயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர்.

ஆனால் அபராதம் செலுத்தாமல் நிஷாந்த் அங்கிருந்து வீட்டிற்கு நடந்து சென்றுள்ளார். இதனையடுத்து அப்ரினி தனது கணவரிடம் மோட்டார் சைக்கிள் எங்கே என கேட்டபோது நிஷாந்த் நடந்தவற்றை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் மன உளைச்சலில் நிஷாந்த் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.

அதிகாலை கண்விழித்து பார்த்த அபிரினி தனது கணவர் தூக்கில் சடலமாக தொங்குவதைக் கண்டு கதறி அழுதார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று நிஷாந்தின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.