
மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக சிறையில் இருந்து ஆங் சான் சூகி என்பவர் போராடினார். இதற்காக அமைதிக்கான நோபல் பரிசையும் அவர் பெற்றிருந்தார். இவருடைய தொடர் போராட்டம் காரணமாக அங்கு ராணுவ ஆட்சி கலைக்கப்பட்டது. தொடர்ந்து 2015-ஆம் ஆண்டு அங்கு நடந்த பொது தேர்தலில் ஆங் சான் சூகி வெற்றி பெற்று அந்த நாட்டின் தலைவராக பதவியேற்றார். அதனை தொடர்ந்து 2020 ஆம் ஆண்டு நடந்த பொது தேர்தலில் 81 சதவீதம் வாக்குகள் பெற்று மீண்டும் ஆட்சி அமைத்தார். பின்னர் 2021 ஆம் ஆண்டு அந்த நாடு மீண்டும் ராணுவ ஆட்சிக்கு கொண்டுவரப்பட்டது. இவர் மீது ஊழல் குற்றச்சாட்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டு 27 வருடங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
இந்நிலையில் சிறையிலுள்ள சூகியை விடுதலை செய்யக்கோரி அங்குள்ள மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்கள் மீது அந்த நாட்டின் ராணுவம் கோர முகத்தை காட்டி அடக்கி வருகின்றது. கடுமையான நிதி நெருக்கடி நிலவி வருகின்ற நிலையில் சூகிக்கு சொந்தமான சொத்துக்களை விற்று பொருளாதார இழப்பை சரிகட்டி வருகின்றது. மேலும் ராணுவ நெருக்கடி நிலையின் போது சூகி அடைக்கப்பட்டிருந்த வீடு கையகப்படுத்தப்பட்டு அதனை ஏலம் விட ராணுவம் நடவடிக்கை எடுத்த நிலையில் அதனை வாங்க யாரும் முன் வரவில்லை.
இதில் வரலாற்று சிறப்பு வாய்ந்த அந்த குட்டி பங்களா தான் சூகியின் தந்தையும் நாட்டின் விடுதலைப் போராட்ட வீரரான ராணுவ தளபதி ஆங் சான் வசித்து வந்த பூர்வீக வீடாகும். அந்த வீடுதான் சூகி 15 ஆண்டுகளுக்கு மேலாக சிறை வைக்கப்பட்டு அறவழியில் போராட வழிவகுத்தது. மேலும் நோபல் பரிசையும் பெற்றுத்தந்தது. அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஒபாமா, கிளின்டன், ஐ.நா சபை முன்னாள் பொதுச் செயலாளர் முதலியவர்கள் அந்த வீட்டில் வைத்து தான் ஆங் சான் சூகியை சந்தித்ததுள்ளனர். மேலும் ஏலம் விடும் முயற்சி தோல்வியில் முடிந்ததால் அந்த நாட்டின் ராணுவத்திற்கு இது பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகின்றது.