
கேரளா மாநிலம் கொல்லம் அருகே உள்ள பகுதியில் போக்குவரத்து துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது காவல்துறையினர், புகை பரிசோதனை சான்றிதழ் இல்லாத வாகன ஓட்டிகள் மற்றும் போக்குவரத்து விதிகளை மீறியவர்களை பிடித்து அவர்களுக்கு அபராதம் விதித்தனர்.
இதனை அப்பகுதியில் கடை வைத்திருக்கும் அல்தாப் என்பவர் கவனித்துள்ளார். அப்போது அவர் காவல்துறையினர் வந்த ஜீப்புக்கு புகை சான்றிதழ் இருக்கிறதா என்று பரிவாகன் இணையதளத்தில் பரிசோதனை செய்துள்ளார். அப்போது அந்த வாகனத்திற்கான புகை பரிசோதனை தேதி கடந்த ஜனவரி மாதமே காலாவதியானது தெரியவந்தது.
இதையடுத்து அவர் பரிசோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த காவல்துறையினரிடம் சென்று, விதிகளை மீறும் எல்லா வாகனங்களுக்கும் அபராதம் விதிக்கிறீர்கள். உங்களது வாகனத்திற்கு புகை பரிசோதனை தேதி காலாவதியாகிவிட்டது. எனவே உங்களுடைய வாகனத்திற்கும் அபராதம் விதிக்க வேண்டும் என்று கூறினர்.
இதற்கு அந்த அதிகாரி, அதை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என்று தெரிவித்தார். நான் பரிவாகன் இணையதளத்தில் பார்த்து விட்டேன். எனவே அபராதம் விதிக்காமல் இங்கிருந்து செல்ல முடியாது என்று அல்தாப் ஜீப்பின் முன்பு நின்று கொண்டார்.
இதையடுத்து அந்த அதிகாரி ஜீப்புக்கு புகை பரிசோதனை சான்றிதழ் உள்ளதா என்று பரிசோதனை செய்தார். அப்போது அல்தாப் கூறியவாறு, கடந்த ஜனவரி மாதமே புகை பரிசோதனை தேதி காலாவதி ஆனது தெரியவந்தது. இதையடுத்து அல்தாப்பிடமிருந்து தப்பிக்க முடியாது என்பதை உணர்ந்த அவர் தனது ஜீப்புக்கு ரூபாய் 2000 அபராதம் செலுத்தினார். அதன் பின் அவர் அங்கிருந்து புறப்பட்டு சென்றார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக்கி வருகிறது.