
உத்திரபிரதேச மாநிலம் லக்னோ-ஆக்ரா எக்ஸ்பிரஸ் சாலையில் அதிவேகமாக ஒரு கார் சென்று கொண்டிருந்தது. இந்த கார் கன்னாஜ் மாவட்ட எல்லைக்கு வந்த போது, சாலையில் அமைக்கப்பட்டுள்ள தடுப்புச் சுவரில் மோதி மறுபக்கம் பாய்ந்தது. அப்போது எதிரே வந்த லாரி மீது நேருக்கு நேர் மோதியது. இதில் காரில் பயணித்த 4 டாக்டர்கள், ஒரு லேப் டெக்னீசியன் என 5 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
முதுகலை மருத்துவ மாணவர் ஒருவர் பலத்த காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த கோர விபத்தில் கார் கடுமையான சேதம் அடைந்தது. இதில் உயிரிழந்தவர்கள் அனைவரும் சாய்பாய் பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையில் வேலை பார்த்து வந்தவர்கள். இவர்கள் லக்னோவில் ஒரு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஊர் திரும்பும்போது, இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.