
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பத்தியால்பேட்டை பகுதியில் தமிழக வெற்றி கழகத்தின் இளைஞரணி சார்பில் அலுவலகம் ஒன்று கட்டப்பட்டுள்ளது. இந்த அலுவலகம் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் வகையில் நெடுஞ்சாலையை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக போக்குவரத்து நெரிசல் காரணமாக சென்னை- திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் ஆக்கிரமித்துக் கட்டப்பட்டிருக்கும் வீடுகள், கடைகள், அலுவலகங்களை இடிக்கும் பணி நடைபெறுகிறது.
இந்தப் பணிக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது. 5 ஜேசிபி வாகனங்கள் மூலம் அதிகாரிகள் இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி ஆக்கிரமிப்பு இடத்தில் கட்டப்பட்ட தமிழக வெற்றிக் கழகத்தின் அலுவலகமும் நெடுஞ்சாலை துறை அதிகாரிகளால் இடித்து அகற்றப்பட்டது.
இந்த அலுவலகம் ஆக்கிரமிப்பு இடத்தில் கட்டப்பட்டுள்ளது என முன்கூட்டியே நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இந்த நிலையில் இன்று இடிக்கப்பட்டுள்ளது. மேலும் அப்பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள வீடுகள், கடைகள் மற்றும் கட்டடங்கள் இடித்து அகற்றப்பட்டன. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது