சென்னை அபிராமிபுரம் கேவிபி கார்டன் பகுதியில் கார்த்திகேயன்(55) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மீது தாழம்பூர் காவல் நிலையத்தில் நில மோசடி குற்றச்சாட்டு உள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக சம்மன் கொடுத்து விசாரணைக்கு அழைப்பதற்காக நேற்று காவல்துறையினர், கார்த்திகேயனின் வீட்டிற்கு வந்தனர்.

பின்னர் காவல்துறையினர் அவரை வெளியே அழைத்து குற்றச்சாட்டு தொடர்பாக விசாரித்ததாக கூறப்படுகிறது. அப்போது திடீரென கார்த்திகேயன் வீட்டின் வாசலில் மயங்கி கீழே விழுந்தார். உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதனை கேட்ட உறவினர்கள் அதிர்ச்சடைந்தனர். சம்மன் கொடுக்க வந்த காவல்துறையினர் கார்த்திகேயனை தாக்கியதால் அவர் மயங்கி விழுந்து உயிரிழந்ததாக குற்றம் சாட்டினர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையடுத்து அபிராமபுரம் காவல்துறையினர் கார்த்திகேயனின் உடலை மீட்டு பிரத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து காவல் துறையினர், அங்குள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.