
நாடாளுமன்ற தொகுதி மறு வரையறைக்கு எதிராக சென்னையில் கூட்டு நடவடிக்கை கூட்டம் நடைபெறுகிறது. இதில் கர்நாடகா துணை முதல்வர் டி.கே சிவக்குமார் பங்கேற்கிறார். இதற்காக சென்னை வந்த அவரை விமான நிலையத்தில் அமைச்சர் பொன்முடி, நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல்லா உள்ளிட்டோர் வரவேற்றனர். இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்து அவர் கூறியதாவது, தொகுதி மறுசீரமைப்புக்கு எதிரான போராட்டத்தின் தொடக்கம் தான் சென்னை கூட்டம். மாநில உரிமைகளையும், தொகுதிகளையோ எக்காரணத்தை கொண்டும் விட்டுக் கொடுக்க மாட்டோம்.
இந்தியாவின் கூட்டாட்சி தத்துவத்தையும், அரசியல் அமைப்பையும் பாதுகாக்கும் வகையில் தொகுதி அரசியலமைப்பு விவகாரத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் முதல் படியை எடுத்து வைத்துள்ளார். இது பெருமைக்குரியது. தொகுதிகள் குறைக்கப்படுவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டோம். அனைவரும் ஒருங்கிணைந்து வெற்றியை நோக்கி பயணிப்போம். இது ஆரம்பம் மட்டுமே. இன்னும் அவர்கள் நிறைய பார்க்க வேண்டியது இருக்கிறது. இந்த கூட்டு நடவடிக்கை குழு மிகப்பெரிய வெற்றியை அடையும் என்று நான் நம்புகிறேன் என்று தெரிவித்தார்.