உத்தரபிரதேச மாநிலத்தின் பிரயாக்ராஜ் ரயில் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மும்பை LTT – பிரயாக்ராஜ் டூரண்டோ எக்ஸ்பிரஸ் ரயிலில் பணியாற்றிய டிக்கெட் பரிசோதகர் எம்.கே. போதார், வழக்கமான டிக்கெட் சோதனை செய்ய ரயிலின் காவலர் பெட்டிக்குள் நுழைந்ததை அடுத்து வாக்குவாதம் ஏற்பட்டது.

பின்னர், ரயில் நிலையத்தில் ரயில் நின்றதும், முன்கூட்டியே குழுவாக காத்திருந்த காவலர்கள் அவரை சுற்றி வைத்து சரமாரியாக தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த காட்சிகள் ரயில்வே பாதுகாப்புப் படையினரின் முன்னிலையில் நடந்திருப்பது மேலும் விமர்சனங்களை உருவாக்கியுள்ளது.

 

இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியதை அடுத்து, டிக்கெட் பரிசோதகர் அதிகாரப்பூர்வ புகார் அளித்துள்ளார். இதனைத் தொடர்ந்து பிரயாக்ராஜ் மண்டல வணிக மேலாளர் ஹிமான்ஷு ஷுக்லா முழுமையான விசாரணைக்கு உத்தரவிட்டார்.

சிசிடிவி காட்சிகள் மற்றும் பிற ஆதாரங்களை பயன்படுத்தி சம்பந்தப்பட்ட காவலர்களை அடையாளம் காணும் பணி முன்னெடுக்கப்படுகிறது. சம்பந்தப்பட்ட ஊழியர்களின் மீது நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று ரயில்வே அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர்.