சென்னை மாவட்டத்தில் உள்ள சேக்காடு பகுதியில் ரவி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வரலட்சுமி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு குணாளினி (20) என்ற மகள் உள்ளார். தாய்-மகள் இருவரும் போரூரில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் வேலை பார்த்து வருகின்றனர். நேற்று வழக்கம்போல தாய், மகள் இருவரும் மொபட்டில் வேலைக்கு சென்று கொண்டிருந்தனர்.

இந்நிலையில் பூந்தமல்லி-மவுண்ட் சாலையில் காட்டுப்பாக்கம் அருகே சென்ற போது குப்பை லாரி மொபட் மீது மோதியது. இதனால் நிலைதடுமாறி கீழே விழுந்த வரலட்சுமி லாரி சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தனது கண் எதிரே தாய் பலியானதை கண்டு குணாளினி கதறி அழுதார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று வரலட்சுமியின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.