கர்நாடக மாநிலம் பெங்களூருவில் பேருந்துக்காக காத்திருந்த பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இரவு 11:30 மணியளவில் பெங்களூர் கே.ஆர் மார்க்கெட் பகுதியிலுள்ள குடோன் தெருவிற்கு அருகில் இச்சம்பவம் நடந்துள்ளது. இதில் பாதிக்கப்பட்ட பெண் பேருந்திற்காக காத்துக் கொண்டிருந்தார். அப்போது அவர் இருவரிடம் தான் செல்ல வேண்டிய இடத்திற்கு பேருந்து வருமா என்று கேட்டுள்ளார். இதில் பெண்ணின் சூழ்நிலையை பயன்படுத்தி அந்த இரு ஆண்களும் உதவி செய்பவர்கள் போல காட்டிக்கொண்டே பேருந்து எங்கு நிற்கும் என்று தங்களுக்குத் தெரியும் என்று கூறியுள்ளனர்.

மேலும் அந்த பெண்ணை குடோன் தெருவிற்கு அழைத்துச் சென்று அங்கு வைத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். பின்னர் அவரிடம் இருந்த நகை பணம் செல் போன் ஆகியவற்றையும் கொள்ளையடித்துவிட்டு அங்கிருந்து தப்பியுள்ளனர். இதனையடுத்து காவல் நிலையத்தில் அந்த பெண் அளித்த புகாரின் அடிப்படையில் அப்பகுதி முழுவதும் உள்ள சிசிடிவி காட்சிகளை சேகரித்து குற்றவாளியை காவல்துறையினர் வலை வீசி தேடி வருவதாக தெரிவித்துள்ளனர்.