சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்திற்கு அபுதாபியில் இருந்து 156 பயணிகளுடன் விமானம் வந்தது. இந்நிலையில் விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்த போது 30 வயது மதிக்கத்தக்க பெண் கூச்சலிட்டார். உடனே சக பயணிகளும் விமான பணிப்பெண்களும் என்ன நடந்தது என கேட்டனர்.
அப்போது இருக்கைக்கு பின்னால் அமர்ந்திருக்கும் வாலிபர் இருக்கைகளுக்கு இடையே கையை விட்டு தன்னிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டதாக பதற்றத்துடன் அந்த பெண் தெரிவித்ததால் விமான பணிப்பெண்களும், சக பயணிகளும் அந்த வாலிபரை கண்டித்தனர். அந்த வாலிபர் தூக்க கலக்கத்தில் தவறுதலாக கைபட்டு விட்டதாக தெரிவித்தார். உடனே அந்த பெண் ஏற்கனவே அவருடைய கைகளை தட்டி விட்டேன்.
ஆனாலும் தொடர்ந்து சில்மிஷத்தில் ஈடுபட்டதாக தெரிவித்தார். இதுகுறித்து விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்தில் விமானம் தரை இறங்கியதும் அதிகாரிகள் அந்த வாலிபரை பிடித்து விசாரித்தனர். பின்னர் சென்னை விமான நிலைய காவல் நிலையத்தில் அவரை ஒப்படைத்தனர்.
இதனையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் அந்த வாலிபர் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த சக்தி என்பதும், சவுதி அரேபியாவில் கூலி வேலை பார்த்துவிட்டு விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்ததும் தெரியவந்தது. அவர் தெரியாமல் செய்துவிட்டேன் என்னை மன்னித்து விடுங்கள் என கதறி அழுதார். மேலும் அந்த பெண்ணிடம் மன்னிப்பு கேட்டார். நான் விடுமுறையில் சொந்த ஊருக்கு வருகிறேன். நீங்கள் புகார் செய்தால் எனது வேலை போய்விடும் எனக் கூறி அழுதார். இதுகுறித்து வழக்குபதிவு செய்து போலீசார் சக்தியை கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.