
சென்னை மாவட்டத்தில் உள்ள தரமணி எம்.ஜி நகரில் சாந்தகுமாரி என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது இரண்டு மகள்களுக்கும் ஒரு மகனுக்கும் ஏற்கனவே திருமணம் ஆகிவிட்டது. இதனால் சாந்தகுமாரி தனியாக வசித்து வருகிறார். அவரது வீட்டிற்கு அருகே 2-வது மகள் உஷா தனது குடும்பத்துடன் தங்கியுள்ளார். நேற்று காலை நீண்ட நேரமாகியும் சாந்தகுமாரி வெளியே வராததால் உஷா வீட்டிற்கு சென்று பார்த்துள்ளார். அப்போது ரத்த காயத்துடன் தனது தாய் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்த உஷா உடனடியாக போலீசருக்கு தகவல் தெரிவித்தார்.
அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் சாந்தகுமாரியின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் வீட்டில் சோதனை நடத்திய போது யாரோ பீரோவை உடைத்து 3 1/2 லட்ச ரூபாய் பணம் மற்றும் நகையை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. மேலும் மாடியில் இருக்கும் வீட்டில் வாடகைக்கு வசித்து வந்த ஸ்ரீஜா நேற்று காலை வீட்டை காலி செய்துள்ளார். அவர்தான் சாந்தகுமாரியை தாக்கி நகைகளை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. இதனால் ஸ்ரீஜாவை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.