தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் வெங்கடேஷ் (55) என்பவர் அவரது குடும்பத்தினருடன் வசித்து வந்தார். இவரது மனைவி மாதவி (50) இவர்களுக்கு ஹரிகிருஷ்ணா (30) எனும் ஒரு மகன் இருக்கிறார். இந்நிலையில் சம்பவ நாளன்று வெங்கடேஷ் குளிப்பதற்காக பாத்ரூமுக்கு சென்றுள்ளார். அதன்பின் பாத்ரூமிலிருந்த லைட்டை போடுவதற்கு ஸ்விட்ச் போர்டில் கை வைத்த அவரை மின்சாரம் தாக்கியது. இதனையடுத்து அலறல் சத்தம் கேட்ட அவரது மனைவி மற்றும் மகன் அவரைக் காப்பாற்றுவதற்கு அவரது கையைப் பிடித்து இழுத்தனர்.

இதனால் அவர்களது மீதும் மின்சாரம் பாய்ந்தது. இதில்  3 பேரும் தூக்கி அடிக்கப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இதனைத்தொடர்ந்து அவர்களது வீட்டில் வேலை பார்க்கும் பெண் ஒருவர் அவரது வீட்டு கதவை தட்டி உள்ளார். நீண்ட நேரமாகியும் கதவை திறக்காததால் சந்தேகப்பட்ட ஆவர் அருகிலுள்ளவர்களின் உதவியோடு கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தார். அப்போது அவர்கள் 3 பேரும் இறந்த நிலையில் கிடந்தனர்.

அதன்பின் அந்தப் பெண் காவல்துறையினருக்கு தகவல் அளித்தார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து 3  பேரின் சடலத்தையும்  மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் காவல்துறையினர் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.