
இந்தியா, பாகிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியா உள்ளிட்ட 8 அணிகள் பங்கேற்க கூடிய 9வது சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி வருகின்ற பிப்ரவரி 19ஆம் தேதி முதல் மார்ச் ஒன்பதாம் தேதி வரை பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற உள்ளது. பாதுகாப்பு காரணமாக பாகிஸ்தான் செல்ல மறுத்ததால் இந்திய அணிக்குரிய ஆட்டங்கள் மட்டும் துபாயில் நடைபெற உள்ளது. வருகின்ற பிப்ரவரி 19ஆம் தேதி கராச்சியில் நடக்கும் தொடக்க ஆட்டத்தில் பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து ஆகிய அணிகள் மோதுகின்றன.
2017 ஆம் ஆண்டுக்குப் பிறகு முதல்முறையாக அரங்கேறும் சாம்பியன்ஸ் டிராபி தொடர் இது என்பதால் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்த நிலையில் இத்தொடரில் கோப்பையை வெல்லப்போகும் அணி தொடர்பாக ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க் தன்னுடைய கருத்தை வெளிப்படுத்தியுள்ளார். அதாவது சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட்டம் வெல்லும் என்று அவர் கூறியுள்ளார்.