
ஆப்கானிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் முஜீப் உர் ரஹ்மான், இங்கிலாந்துக்கு எதிரான வெற்றிக்குப் பிறகு அழுத சிறுவன் ஒரு இந்திய சிறுவன் என்று தெரிவித்துள்ளார்..
2023 உலகக் கோப்பையில் நடப்பு சாம்பியனான இங்கிலாந்துக்கு எதிராக ஆப்கானிஸ்தான் அணி 69 ரன்கள் வித்தியாசத்தில் வரலாற்று வெற்றி பெற்றது. டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் கடந்த 15ஆம் தேதி நடைபெற்ற இப்போட்டியில் முதலில் ஆடிய ஆப்கானிஸ்தான் அணி 284 ரன்களை எடுத்தது. ரஹ்மானுல்லா குர்பாஸ் 80 ரன்கள் மற்றும் இக்ராம் அலிகில் 58 ரன்கள் எடுத்தனர்.
பின்னர் 285 என்ற இலக்கை துரத்திய இங்கிலாந்து அணியை 40.3 ஓவர்களில் 215 ரன்களுக்கு ஆட்டமிழக்கச் செய்த ஆப்கானிஸ்தான் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இந்த வெற்றி ஒருநாள் உலகக் கோப்பையில் அவர்களின் இரண்டாவது வெற்றியாகும். 8 ஆண்டுகளுக்கு முன்பு 2015 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் அவர்கள் ஸ்காட்லாந்தை தோற்கடித்த நிலையில், இந்த உலக கோப்பையில் முதல் 2 போட்டிகளில் தோல்விக்கு பின் தங்களது 3வது போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்தி அதிர்ச்சி கொடுத்தது.
இந்த போட்டியில் ஆஃப்-ஸ்பின்னர் முஜீப் 10 ஓவரில் 51 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை எடுத்தார். இதில் ஹாரி புரூக் மற்றும் ஜோ ரூட்டின் மதிப்புமிக்க விக்கெட்டுகளும் அடங்கும். 22 வயதான அவர் பேட் மற்றும் பந்தில் சிறப்பாக செயல்பட்டதற்காக ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார். அவர் பேட்டிங்கிலும் கடைசியில் 16 பந்துகளில் 28 ரன்கள் எடுத்தார்.
இந்த வெற்றிக்கு பின் ஒரு சிறுவன் ஆனந்த கண்ணீருடன் நட்சத்திர ஆப்கானிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் முஜீப் உர் ரஹ்மானை கட்டிப்பிடித்தார். இந்த சிறுவன் அழுவதைப் பார்த்து, ஆப்கானிஸ்தான் டக்அவுட் உறுப்பினர் ஒருவர் விரைவாக ஒரு சாக்லேட்டைக் கொண்டு வந்து முஜீப் உர் ரஹ்மானிடம் கொடுத்தார், பின்னர் அவர் அதை இளம் ரசிகரிடம் கொடுத்தார். இந்த வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களால் வைரலானது.. முஜீப்பை கட்டிப்பிடித்து அழுத அந்த சிறுவன் ஆப்கானை சேர்ந்த சிறுவன் என்று தான் அனைவரும் நினைத்தனர். ஆனால் அதுதான் இல்லை.. அந்த சிறுவன் இந்தியர் என முஜீப் தெரிவித்துள்ளார்…
இந்நிலையில் ரசிகர்களின் அமோக அன்பு மற்றும் ஆதரவிற்காக முஜீப் நன்றி தெரிவித்தார், எதிர்காலத்தில் ரசிகர்களின் ஆதரவை எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ளார். ஆப்கான் வீரர் முஜீப் உர் ரஹ்மான் தனது எக்ஸ் பக்கத்தில், இது ஆப்கானி பையன் அல்ல, ஒரு இளம் இந்திய பையன், எங்கள் வெற்றியில் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளான், இந்தியாவை சேர்ந்த இந்த குட்டி பையனை நேற்று இரவு டெல்லியில் சந்தித்தது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது (கிரிக்கெட் என்பது வெறும் விளையாட்டு அல்ல, இது ஒரு உணர்வு) நேற்றிரவு எங்களுக்கு ஆதரவளித்த அன்பும் ஆதரவும் மிகப்பெரியது.
உங்கள் தொடர்ச்சியான ஆதரவிற்கு நாங்கள் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம், எதிர்காலத்தில் நீங்கள் தொடர்ந்து எங்களை ஆதரிப்பதற்காக நாங்கள் காத்திருக்க முடியாது, அன்புக்கு நன்றி டெல்லி” என தெரிவித்துள்ளார்..
இந்த மனதை தொடும் தருணம் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு சிறப்பு முக்கியத்துவம் வாய்ந்தது, ஏனெனில் அவர்களின் நாடு சமீபத்தில் பேரழிவு தரும் பூகம்பங்களை அனுபவித்தது. ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்ட முஜீப் உர் ரஹ்மான், தனது விருதை நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட ஆப்கானிஸ்தான் மக்களுக்கு அர்ப்பணித்தார்.
உலகக் கோப்பையில் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி இன்று புதன்கிழமை சேப்பாக்கத்தில் நியூசிலாந்தை எதிர்கொள்ளவுள்ளது குறிப்பிடத்தக்கது..
It’s not afghani boy it’s one young Indian boy so happy for ur win It was absolute pleasure meeting this little guy from India Delhi last night (Cricket is not just a game it's an emotion)💙Big thank you to all our amazing fans for coming down and supporting us last night the… pic.twitter.com/bUYh7BDowx
— Muj R 88 (@Mujeeb_R88) October 17, 2023