
மத்திய அரசு ஊழியர்கள் காலை 9.15 மணிக்குள் அலுவலகத்திற்குள் வந்துவிட வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. கடந் 2014 ஆம் வருடம் பிரதமர் நரேந்திர மோடி முதல் முறையாக பிரதமராக பதவி ஏற்றதையடுத்து ஆட்சி நிர்வாகத்தில் பல மாற்றங்கள் செய்யப்பட்டது. அதில் அரசு ஊழியர்கள் பணி ஈடுபாடு மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையும் முக்கியமானது. அதற்கு முன்பு வரை மத்திய அரசு ஊழியர்கள் அலுவலகத்திற்கு வருவதற்கு எந்தவித கட்டுப்பாடும் விதிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. ஆனால் 2014 ஆம் வருடத்திற்கு பிறகு பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது.
காலையில் சரியான நேரத்தில் அலுவலகத்திற்கு வந்து விட வேண்டும். மதிய உணவு இடைவேளை நேரத்தை அதிகமாக எடுத்துக் கொள்ளக் கூடாது உள்ளிட்ட பல கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டது. அதேபோன்று பயோ மெட்ரிக் வருகை பதிவும் கொண்டுவரப்பட்டது. இதற்கிடையில் கொரோனா வந்ததால் தளர்வுகள் ஏற்பட்டது. இதனால் நடைமுறையில் கொஞ்சம் தளர்வு ஏற்பட்டது. இதை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் சாதகமாக்கி கொண்டார்கள்.
இதனால் மத்திய அரசு அலுவலகத்தில் ஒழுங்காக வேலைகள் நடக்கவில்லை என்று ரகசிய தகவல் மத்திய அரசுக்கு சென்றுள்ளது. எனவே இதை சரி செய்வதற்கு மத்திய அரசு அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. அதன்படி மத்திய அரசு ஊழியர்கள் காலை 9.15 மணிக்குள் அலுவலகத்திற்கு வந்து விட வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அந்த நேரத்திற்கு பிறகு தாமதமாக வந்தால் அவர்களுக்கு அரை நாள் விடுப்பு கட்டாயம் ஆக்கப்படும் .பணிக்கு தாமதமாக வருவது தெரிய வந்தால் அது குறித்து உயர் அதிகாரிகளிடம் முன்பே தெரிவித்து சாதாரண விடுப்புக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.