
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பாதரை கிராமத்தில் சேகர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தாரணி ஸ்ரீ என்ற மகள் இருந்துள்ளார். 15 வயதுடைய தாரணி ஸ்ரீ அரசு மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான சேகர் அடிக்கடி வீட்டில் இருப்பவர்களுடன் தகராறு செய்துள்ளார். இப்படி தகராறு செய்தால் தற்கொலை செய்து கொள்வேன் என தாரணி அடிக்கடி கூறியுள்ளார். இருப்பினும் சேகர் மது குடிக்கும் பழக்கத்தை விடாததால் மன உளைச்சலில் இருந்த தாரணி நேற்று பள்ளிக்கு சென்றார். அதன்பிறகு அவர் வீட்டிற்கு வரவில்லை.
இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது அக்ரஹாரம் பகுதியில் காளிங்கராயன் கால்வாயில் தாரணி ஸ்ரீ சடலமாக மிதப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சிறுமியின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இறப்பதற்கு முன்பு மாணவி எழுதிய மூன்று பக்க கடிதத்தை போலீசார் புத்தகப்பையில் இருந்து கைப்பற்றினர். இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.