கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே எஸ் குளத்தூர் கிராமத்தை சேர்ந்த விவசாயி குமரவேல் அதே கிராம எல்லையில் உள்ள தன்னுடைய ஐந்து ஏக்கர் நிலத்தில் தென்னை, மா, வாழை மற்றும் கொய்யா உள்ளிட்ட மரங்களை சாகுபடி செய்து பராமரித்து வருகின்றார். இந்த நிலையில் கடந்த ஜூன் 10ஆம் தேதி அவர் சொந்த வேலை காரணமாக வெளியூர் சென்ற நிலையில் இதனை அறிந்த மர்ம கும்பல் இரவோடு இரவாக அவருடைய தோப்புக்குச் சென்று அங்குள்ள தென்னை மரத்தில் ஏறி இளநீர் குலைகளை கயிறு மூலமாக கீழே இறக்கி அவற்றை வெட்டி குடித்துள்ளனர்.

பிறகு குமரவேலுவை எச்சரிக்கும் விதமாக அங்கிருந்த புளிய மரத்தில் பட்டை நாமம் வரைந்த நோட்டீஸ் ஒன்றை ஒட்டி விட்டு சென்றனர். இதனைத் தொடர்ந்து ஊர் திரும்பிய பிறகு குமரவேல் தோப்புக்கு சென்று பார்த்த போது தென்னை மரத்திலிருந்து சுமார் 60 இளநீரை மர்மகும்பல் வெட்டியது தெரியவந்தது. பிறகு தன்னுடைய பசுமாட்டை அங்கு நின்ற புளிய மரத்தில் கட்டி போட சென்ற அவர் இளநீர் திருடிய கும்பல் ஒட்டி சென்ற நோட்டீசை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். அதில், தீர விசாரிக்க வேண்டாம், இதுவே இறுதியாகட்டும், மீறி விசாரித்தால் மீண்டும் வேட்டை தொடரும் நன்றி”

வேண்டுகோள்- செவ்விளநீர் மரங்களை வளர்க்கவும்

எச்சரிக்கை- எங்களை கண்டுபிடிக்க இயலாது என்று ஒட்டப்பட்டிருந்தது.

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.