
சேலம் மாவட்டத்தில் உள்ள கொத்தம்பாடி பெரியார் நகர் ஆதிதிராவிடர் தெருவில் முருகேசன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் ஹரிபாபு கடந்த ஜனவரி மாதம் முதல் ஊர்காவல் படையில் வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த ஒரு மாதமாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட ஹரிபாபு பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். ஆனாலும் நோய் குணமாகவில்லை.
இதனால் மன உளைச்சலில் இருந்த ஹரிபாபு தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஹரிபாபுவின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் நோய் கொடுமையால் ஹரிபாபு தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணம் இருக்கிறதா? என விசாரணை நடத்தி வருகின்றனர்.