உத்திரபிரதேசம் மாநிலத்தை சேர்ந்த அனில் குமார் மற்றும் பூஜா தம்பதியினர் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பெங்களூருக்கு வந்தனர். அங்கு புறநகர் பகுதியில் வாடகை வீட்டில் தங்கி கூலி வேலை பார்த்து வந்துள்ளனர். அவர்கள் வாடகை வீட்டில் முதல் தளத்தில் வசித்து வந்த நிலையில் அணில் குமார் மற்றும் பூஜா இடையே அடிக்கடி குடும்ப பிரச்சனை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று இரவு உணவு சாப்பிடும் போது அனில் குமார் தனக்கு கூடுதல் முட்டை வேண்டும் என பூஜாவிடம் கேட்ட நிலையில் அதற்கு பூஜா மறுத்துள்ளார்.

இதனால் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்ட நிலையில் பூஜாவை கணவர் கடுமையாக திட்டி உள்ளார். இதனால் மனமுடைந்த பூஜா வீட்டின் முதல் தளத்திலிருந்து கீழே குதித்தார். இதில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் நடத்திய விசாரணையில் முட்டைக்காக ஏற்பட்ட பிரச்சனையில் பூஜா தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதனை தொடர்ந்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.