
திருச்சி மாவட்டம் செங்குடி பகுதியை சேர்ந்தவர் கணேசன். இவரது மகன் விவேக்(32) திருச்சி மாவட்ட ஆயுதப்படையில் இரண்டாம் நிலை காவலராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்த நிலையில் வேலை முடிந்ததும் விவேக் தனது மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு சென்றார். அப்போது திருச்சி நம்பர் ஒன் டோல்கேட் அருகே உத்தமர்கோவில் ரயில்வே மேம்பாலம் வளைவில் சென்ற போது எதிரே வந்த அரசு பேருந்து மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இந்த விபத்தில் 25 அடி உயர பாலத்தில் இருந்து கீழே விழுந்து விவேக் படுகாயம் அடைந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு விவேக்கை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.