
சென்னை மாவட்டத்தில் உள்ள வண்டலூர் ரயில் நிலையத்திற்கும் பெருங்களத்தூர் ரயில் நிலையத்திற்கும் இடையே தலை,கை, கால் உள்ளிட்ட பகுதிகளில் படுகாயங்களுடன் ஒரு ஆணும் பெண்ணும் இறந்து கிடந்தனர். இதுகுறித்து அறிந்த தாம்பரம் ரயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இரண்டு பேரின் உடல்களையும் மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் சடலமாக மீட்கப்பட்டவர்கள் கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவிலை சேர்ந்த விக்ரம்(22) சிதம்பரம் பகுதியைசேர்ந்த ஆதிலட்சுமி(22) என்பது தெரியவந்தது. இருவரும் வண்டலூர் அருகே தங்கி தனியார் நிறுவனங்களில் வேலை பார்த்து வந்துள்ளனர்.
விக்ரமும் ஆதிலட்சுமியும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்தனர். இவர்களது காதலுக்கு இரு வீட்டாரும் எந்தவித எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்து விக்ரமும் ஆதிலட்சுமியும் பேசிக்கொண்டே தண்டவாளத்தை கடந்து சென்றனர். அப்போது செங்கல்பட்டில் இருந்து சென்னை கடற்கரை சென்ற மின்சார ரயில் மோதி இருவரும் உயிரிழந்தது தெரியவந்தது. முதலில் ஆதிலட்சுமி விபத்தில் சிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அவரை விக்ரம் காப்பாற்ற முயன்றார். ஆனால் கண்ணிமைக்கும் நேரத்தில் இரண்டு பேருமே விபத்தில் சிக்கி உயிரிழந்தனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.