ஒருநாள் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி தமிழகத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக இன்று சென்னை வந்தார். பிரதமர் மோடியை அமைச்சர் காந்தி, சென்னை மேயர் பிரியா உள்ளிட்டோர்  வரவேற்றனர். இதையடுத்து விமான நிலையத்திலிருந்து ஹெலிகாப்டர் மூலம் கல்பாக்கம் ஹெலிபேடு மையத்திற்கு பிரதமர் மோடி சென்றார். இதனைத்தொடர்ந்து கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் ஈணுலை திட்டத்தை தொடங்கி வைத்த பின் ஹெலிகாப்டர் மூலம் மீண்டும் சென்னை விமான நிலையம் வந்த பிரதமர் நரேந்திர மோடி, பின்னர் சாலை மார்க்கமாக சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் பாஜக சார்பாக நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பங்கேற்றார்.

இந்த கூட்டத்தில், ‘வணக்கம் சென்னை’ என தனது உரையை தொடங்கினார் பிரதமர் மோடி. இந்த பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, ஒவ்வொரு முறை சென்னை வரும் போதெல்லாம் எனக்கு சக்தி வருகிறது. திறமை, வர்த்தகம், பாரம்பரியம் உள்ளிட்டவற்றின் முக்கிய புள்ளியாக சென்னை விளங்குகிறது. வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கு சென்னை வாசிகள் முக்கிய பங்கு வகிக்கிறார்கள். சமீபகாலமாக தமிழ்நாட்டுக்கு வரும் போதெல்லாம் சிலருக்கு வயிற்று வலி ஏற்படுகிறது. எனக்கும், தமிழ்நாட்டிற்கும் இடையிலான உறவு மிகவும் பழமையானது. தமிழ்நாட்டில் பாஜகவிற்கு மக்களின் ஆதரவு பெருகி வலிமை அடைந்து வருவதால் சிலருக்கு எனது வருகை பயத்தை தருகிறது. வளர்ச்சி அடைந்த பாரதத்துடன் வளர்ச்சி அடைந்த தமிழ்நாடு எனது இலக்கு .

இந்தியாவை உலகின் 3வது பெரிய பொருளாதாரமாக்க தமிழகத்தின் பங்களிப்பு அவசியம். சென்னை மெட்ரோ, விமான நிலைய விரிவாக்கம், மதுரவாயல் பறக்கும் சாலை திட்டங்கள் முக்கியம். மத்திய அரசின் திட்டங்களால் சென்னையில் புதிய கட்டுமானங்கள் பெருகி உள்ளது.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை மக்களுக்கு திமுக மேலும் துயரத்தை கொடுத்தது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை மக்களை திமுக அரசு கண்டு கொள்ளவில்லை. சென்னையில் திமுக அரசு நிர்வாகிகள் மீடியாக்களை நிர்வகிக்கின்றது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு சென்னை வாசிகள் வீடுகளுக்குள் மழை நீர் புகுந்தது. சென்னையில் பாலும், தேனும் ஓடுவதாக மீடியாக்களை திமுக அரசு சரி கட்டுகிறது. மத்திய அரசின் திட்டங்களை தமிழ்நாட்டில் செயல்படுத்த திமுக அரசு இடையூறாக இருக்கிறது.

இயற்கை பேரிடர் ஏற்பட்ட போது துன்பத்தில் இருந்த மக்களுக்கு திமுக அரசு உதவவில்லை. மக்களின் துயரம் குறித்து திமுக அரசுக்கு கவலை இல்லை. தங்கள் அரசை பற்றி சுய விளம்பரம் செய்வதில் தான் கவனம். தமிழக மக்களின் துன்பங்களை, தேவைகளை மத்திய அரசு புரிந்து வைத்துள்ளது. ரேஷனில் இலவச அரிசி, கொரோனா பெருந்தொற்று காலத்தில் இலவச தடுப்பூசியை வழங்கியது பாஜக அரசு. இந்திய மக்கள் அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி வழங்கியது. தமிழகத்தின் சிறுகுறு தொழில் நிறுவனங்களுக்கு மத்திய அரசு கணக்கில்லாமல் கடன் உதவி வழங்கியது.

இலட்சக்கணக்கான மக்களுக்கு மத்திய அரசின் திட்டங்கள் நேரடியாக சென்றடைவது தான் திமுக அரசின் மனக்குறை. மத்திய அரசின் திட்டங்களில் ஊழல் செய்ய முடியவில்லை என திமுக கோபத்தில் உள்ளது. மத்திய அரசின் உதவி ஏழை மக்களின் வங்கி கணக்கிற்கு செல்வதை திமுகவால் ஏற்க முடியவில்லை. லட்சக்கணக்கான கோடி ரூபாய் வளர்ச்சித் திட்டங்களில் ஊழல் செய்ய முடியவில்லை என திமுக அரசு வருந்துகிறது. தமிழக அரசின் மக்கள் பணத்தை திமுகவினர் கொள்ளை அடிக்க நான் விடமாட்டேன். திமுக கொள்ளையடித்த பணம் மீண்டும் வசூலிக்கப்பட்டு தமிழக மக்களுக்கு திருப்பி தரப்படும் என உறுதி அளிக்கிறேன். மத்திய அரசின் திட்டங்களில் திமுகவினர் தங்கள் ஸ்டிக்கர்களை ஒட்டுகின்றனர்.

திமுக அரசு கொள்ளையடித்த பணத்தை திரும்ப பெற்று தமிழக மக்களின் நலனுக்காக பயன்படுத்தப்படும். குடும்ப அரசியல் செய்யும் கட்சிகள் தங்கள் குடும்பத்தை மட்டுமே நினைத்து அரசியல் செய்கின்றனர். திமுக குடும்ப அரசியல் செய்கிறது. நான் நாட்டு மக்களுக்கான அரசியல் செய்கிறேன். சிலர் தங்கள் குடும்பத்திற்காக அரசியல் செய்யும் நிலையில் நான் எனது நாட்டு மக்களுக்காக அரசியல் செய்கிறேன். குடும்பக் கட்சி ஆட்சியில் நாட்டில் 18000 வீடுகளில் மின்சாரம் இல்லாமல் இருந்தது.

அதிவேக ஈனுலை கொண்ட இரண்டாவது நாடு என்ற பெருமையை பெற்றுள்ளது இந்தியா. மின்சாரத் தேவையில் நாடு சுயசார்பு என்பதை நோக்கி பயணிப்பதற்கு கல்பாக்கம் சாட்சி. நாடு தன்னுடைய மின் சக்தி தேவைகளுக்காக மிகப்பெரிய பணியை செய்ய வேண்டி உள்ளது. நாடு முழுவதும் ஏராளமான மின் திட்டங்கள் துவங்கப்பட்டு வருகின்றன. இலக்கு பெரிதாக இருக்கும் போது உழைப்பும் பெரிதாக இருக்க வேண்டும். தெலுங்கானாவில் 1600 மெகாவாட் தெர்மல் பவர் பிளான்டிற்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. 50 நாட்களில் நாடு முழுவதும் பல இடங்களில் மின்சக்தி உற்பத்திக்கான பல ஆலைகள் திறக்கப்பட்டுள்ளன.

திமுகவிற்கும், காங்கிரசுக்கும் குடும்பமே முக்கியம் என்பது தமிழர்களுக்கு தெரியும். தேசத்திற்கே முக்கியத்துவம், முன்னுரிமை என செயல்படுபவன் நான். காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை உள்ள அனைவருமே மோடியின் குடும்பம். மோடிக்கு குடும்பம் இல்லை என கூறிவிட்டு தன் குடும்பத்திற்காக தேசத்தை திருடுகிறார்கள். தேசத்தை கொள்ளை அடிப்பதற்கான லைசென்ஸ் குடும்பம் அல்ல. இந்த நாடுதான் என் குடும்பம்.. மக்கள்தான் என் உறவினர்கள்..நாட்டின் இளைஞர்கள், மகளிர், விவசாயிகள் அனைவரும் எனது குடும்பத்தினர். தேசமே முக்கியம் என்ற கனவுடன் நான் வீட்டை விட்டு வெளியே வந்தேன். இந்தியர்கள் தான் என் குடும்பம். தேசமே தற்போது நான் மோடியின் குடும்பம் என்று கூறிக் கொண்டிருக்கிறது என நெகிழ்ச்சியாக பேசினார்.

மேலும் பிரதமரின் சூரிய வீடு திட்டம் முற்றிலும் இலவசமானது. திட்டத்திற்காக ரூபாய் 75 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வீடுகளில் சூரிய மின்சார தகடுகள் பொருத்தி பெறப்படும் மின்சாரம் மக்களுக்கு இலவசமாக வழங்கப்படும். வீட்டிற்கு தேவையான மின்சாரம் பயன்படுத்தப்பட்டு எஞ்சிய மின்சாரத்தை அரசே கொள்முதல் செய்து கொள்ளும்.

இந்தியா கூட்டணியில் உள்ள கட்சிகள் ஊழல் குடும்ப அரசியலில் மூழ்கி கிடக்கிறது, காங்கிரஸ், திமுக கட்சிகள் ஊழல் மற்றும் குடும்ப அரசியலில் மூழ்கி கிடைக்கிறது. ஊழலில் திளைத்து கிடக்கும் கட்சிகளால் தான் அரசியலில் இருந்த இளைஞர்கள் விலகி நிற்கிறார்கள். எத்தனை தடைகள் வந்தாலும் இந்தியாவை தூய்மைப்படுத்தியே தீருவேன். தூய்மை பணியே எனக்கு பிடித்த பணி. குடும்ப அரசியல் செய்பவர்கள் அகங்காரம், திமிர் கொண்டவர்களாக உள்ளனர். குடும்ப அரசியல் செய்பவர்களுக்கு உழைப்பு என்றால் என்ன என்று தெரியாது.

குடும்ப அரசியல் செய்பவர்களுக்கு ஒரு குணம் உண்டு. இவர்கள் உழைப்பிலிருந்து வெகு தூரத்தில் இருப்பார்கள். குடும்ப அரசியல் செய்பவரால் பலரின் கனவுகள் ஆசைகள் நிறைவேறாமல் போய்விடுகிறது. குடும்ப அரசியல் செய்பவர்கள் மக்களை அடிமைகளாக நடத்துகின்றனர். கோடிக்கணக்கான மக்களின் நம்பிக்கையை காலில் போட்டு மிதிப்பது குடும்ப அரசியல். திமுக குடும்ப அமைச்சர் ஒருவரை உச்ச நீதிமன்றம் இன்று சரமாரியாக கேள்வி கேட்டுள்ளது. அதிகார மமதையில் இருக்கும் ஒரு தமிழக அரசியல்வாதியை உச்ச நீதிமன்றம் இன்று கண்டித்து உள்ளது. மக்களின் உணர்வை மதிக்காத ஒருவர் தற்போதும் தமிழக அமைச்சரவையில் நீடிக்கிறார். அதிகார மமதையின் காரணமாக லட்சக்கணக்கானோரின் நம்பிக்கையை இழிவு படுத்தியவர் இன்றும் பதவியில் தான் இருக்கிறார் என உதயநிதியை மறைமுகமாக சாடினார் பிரதமர் மோடி..

மேலும் தமிழ்நாட்டில் ஆட்சியில் உள்ள கட்சியின் ஆதரவோடு போதை பொருட்கள் கடத்தப்படுகின்றன. போதை பொருள் புழக்கத்தால் தமிழ்நாட்டில் இளைஞர்களின் எதிர்காலம் குறித்து எனக்கு கவலை ஏற்பட்டுள்ளது. தமிழக இளைஞர்களின் எதிர்காலத்தை நாசமாக்கும் போதை பழக்கம் அதிகமாகிறது. போதை பொருள்களால் தற்போதைய இளைஞர்கள் மட்டுமல்ல, எதிர்கால சந்ததி பாதிக்கப்படும்.

பாஜகவுக்கு தமிழக மக்கள் ஆதரவு அளித்தால் போதை பொருள் விவகாரத்தில் தீவிர நடவடிக்கை எடுக்கப்படும். தமிழக மக்கள் பாஜகவை பலப்படுத்தினால் தமிழகத்தின் எதிரிகளின் மீதான நடவடிக்கை வேகமெடுக்கும். தமிழகத்தில் போதை பொருட்கள் தங்கு தடையின்றி கிடைக்கின்றன. வளர்ச்சி அடைந்த தமிழ்நாட்டிற்கு நாம் இணைந்து பணியாற்ற வேண்டும், அதற்கு பாஜகவிற்கு ஆதரவு அளியுங்கள். வளர்ச்சி அடைந்த தமிழ்நாடு வளர்ச்சி அடைந்த இந்தியாவிற்கு அடிப்படையாக இருக்கும். தமிழகத்தில் போதை பொருள் நடமாட்டத்தை ஒழிப்பேன் என கேரன்டி வழங்குகிறேன்” என தெரிவித்தார்.