ஈரோடு மாவட்டம் பவானியில் திருப்பூரைச் சேர்ந்த 18 வயது இளைஞன் தங்களது உறவினர் குரு என்பவரின் வீட்டில் வசித்து வருகிறார். இவர் கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படிக்கிறார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு  அந்த இளைஞன் தன்னுடைய உறவினரான குருவின் காரை எடுத்துக்கொண்டு வெளியே சென்றுள்ளார்.

அவர் பவானியில் இருந்து மேட்டூர் சாலையை நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது வாகனம் ஜல்லிக்கல்மேடு என்ற இடத்தின் அருகே சென்ற போது கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரமாக உள்ள கீற்று கொட்டகையினுள் நுழைந்தது. இந்த விபத்தில் கொட்டகையின் உள்ளே உறங்கிக் கொண்டிருந்த கற்பகவல்லி என்ற பெண் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

மேலும் இளைஞன் படுகாயம் அடைந்தார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் உயிருக்கு போராடிய நிலையில் இருந்த இளைஞனை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

இந்த விபத்து குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விபத்தில் பலியான பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் .மேலும் இந்த விபத்து தொடர்பாக வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.