உத்தரபிரதேச மாநிலம் மீரட்டில் 25 வயதான அமித் காஷ்யப் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக அதிர்ச்சிக்குரிய தகவல் தற்போது வெளிவந்துள்ளது. முதலில், அமித்தின் மரணம் பாம்பு கடியால் ஏற்பட்டதாக கூறப்பட்டாலும், பின்னர் அவரது மனைவி ரவிதா, தன் காதலன் அமர்தீப்புடன் சேர்ந்து திட்டமிட்டு கொலை செய்ததாக போலீசில் ஒப்புக்கொண்டுள்ளார். கோயிலுக்குச் சென்றதாகக் கூறி, யாத்திரை பெயரில் இந்தக் கொலை திட்டமிடப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.

பாரத் சமாசார் செய்தி நிறுவனம் வெளியிட்ட தகவலின்படி, அமித் தனது மனைவி ரவிதாவுடன் சகம்பரி தேவி கோயிலுக்குச் சென்றுள்ளார். அங்கு தன்டவுடி யாத்திரையில் பங்கேற்ற பின்னர், அவர்கள் வீடு திரும்பியுள்ளனர். பின்னர், ரவிதா தனது கணவனின் நண்பரான அமர்தீப்பை அழைத்து கொலை திட்டத்தை செயல்படுத்த திட்டமிட்டுள்ளார். இருவரும் அமித்தை கழுத்தை நெரித்து  கொன்று, அதன் பின்னர் அவரது உடலருகே பாம்பை வைத்துள்ளனர். இதன்மூலம், மரணம் பாம்பு கடியால் ஏற்பட்டது எனக் காட்ட முயன்றுள்ளனர்.

 


முதலில், அமித்தின் உடலில் பாம்பு பத்துமுறை கடித்ததாகவும், அந்த பாம்பு படுக்கையின்கீழ் அன்றிரவு முழுவதும் இருந்ததாகவும் குடும்பத்தினர் தெரிவித்திருந்தனர். ஆனால், பிறகு நடத்தப்பட்ட பிரேத பரிசோதனையில் விஷம் தாக்கியால் மரணம் ஏற்படவில்லை என்றும், உண்மையில் அவரை கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளனர் என்பதும் உறுதி செய்யப்பட்டது. தற்போது ரவிதா மற்றும் அமர்தீப் இருவரும் போலீசால் கைது செய்யப்பட்டுள்ளனர்.