சேலம் மாவட்டத்தில் உள்ள மலையம்பாளையத்தில் சுந்தரராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஹைதராபாத்தில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் என்ஜினியராக வேலை பார்த்து வந்துள்ளார் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு சுந்தரராஜுக்கு சேலம் குகை பகுதியை சேர்ந்த நிவேதா என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதியினருக்கு 7 வயதில் ஒரு மகன் இருக்கிறான். இந்நிலையில் சுந்தர்ராஜ் தூக்கிட்டு தற்கொலை செய்ததாக போலீசாருக்கும், உறவினர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதன்படி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சுந்தரராஜின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில் நிவேதா தனது கள்ளக்காதலன் தினேஷ் என்பவருடன் இணைந்து கணவரை கொலை செய்தது தெரியவந்தது. இந்த கொலைக்கு மூளையாக நிவேதாவின் தோழி வித்யா இருந்துள்ளார்.

இந்த வழக்கு குறித்து பரபரப்பு தகவல் வெளியானது. ஹைதராபாத்தில் வேலை பார்த்த சுந்தரராஜ் கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு வந்து பெற்றோருடன் கூட்டு குடும்பமாக இருந்துள்ளார். மேலும் வயிற்று வலிக்கு சுந்தரராஜ் ஈரோட்டில் இருக்கும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இதனையடுத்து நிவேதா அங்குள்ள தனியார் பள்ளியில் தற்காலிக ஆசிரியராக வேலைக்கு சேர்ந்தார். அப்போது தோழி வித்யா மூலம் தினேஷ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு அது கள்ளக்காதலாக மாறியது.

இதனை அறிந்த சுந்தரராஜ் தனது மனைவியை கண்டித்து பள்ளிக்கூட வேலைக்கு செல்ல வேண்டாம் என தடை போட்டார். இதனால் கோபமடைந்த நிவேதா தனது தோழி வித்யாவின் பேச்சைக் கேட்டு கணவருக்கு உணவில் தூக்க மாத்திரை கலந்து கொடுத்தார். இதனையடுத்து அங்கு வந்த தினேஷ் சுந்தரராஜன் முகத்தை பிளாஸ்டிக் கையால் மூடி தலையணையால் அமுக்கி கொலை செய்தது தெரியவந்தது. பின்னர் அவர்கள் சுந்தரராஜ் தற்கொலை செய்து கொண்டது போல நாடகம் ஆடியுள்ளனர்.