உத்தர பிரதேச மாநிலம் பிஜ்னோரின் ஜாலூ பகுதியில் வியாழக்கிழமை மாலை நடந்த துயர சம்பவம் சமூகத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருமண விழாவிலிருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த ஐந்து நண்பர்கள், அதிக வெப்பத்தால் பாதிக்கப்பட்ட நிலையில், ஜாலூ பகுதியில் உள்ள நகர் கால்வாயில் குளிக்க முயன்றனர்.

அப்போது தாம்பூர் பகுதியைச் சேர்ந்த ஆதில் மற்றும் ஜீஷான் ஆகிய இருவரும் கால்வாயின் வேகமான வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டனர்.

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த மற்ற நண்பர்கள் உடனே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் உடனடியாக கால்வாயின் நீரோட்டத்தை நிறுத்தி, மீட்பு  குழுவினருடன் நடவடிக்கையை தொடங்கினர்.

நீண்ட தேடலுக்குப் பிறகு, ஆதிலின் சடலம் சம்பவ இடத்திலிருந்து 2 கி.மீ தூரத்திலும், ஜீஷானின் சடலம் 4 கி.மீ தூரத்தில் நவாடா கிராமம் அருகே கண்டுபிடிக்கப்பட்டது.

ஹல்தோர் காவல் நிலைய அதிகாரி புஷ்கர் மெஹ்ரா தெரிவித்ததாவது, இருவரின் சடலங்களும் பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளன என்றும், சம்பவம் தொடர்பாக சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கூறினார்.