சென்னை மாவட்டத்தில் உள்ள கொடுங்கையூர் எம் ஆர் நகர் 5-வது தெருவில் சீனிவாசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் டெய்லராக வேலை பார்க்கிறார் சீனிவாசன் அடிக்கடி மது குடித்துவிட்டு தனது மனைவி தனலட்சுமியுடன் தகராறு செய்துள்ளார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு போதையில் வீட்டிற்கு வந்த சீனிவாசனிடம் தனலட்சுமி ஏன் இப்படி தினமும் குடித்துவிட்டு வருகிறீர்கள். வீட்டில் குழந்தைகள் இருக்கிறார்கள் என கூறி தனது கணவரை கண்டித்தார்.

இதனால் ஏற்பட்ட தகராறில் கோபமடைந்த சீனிவாசன் தனது மனைவியை கத்திரிக்கோலால் சரமாரியாக குத்தினார். அதனை தடுக்க வந்த தனலட்சுமியின் தாய் பப்புவையும் கத்திரிக்கோலால் குத்தினார். இதனால் படுகாயமடைந்த தனலட்சுமி மற்றும் அவரது தாயை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் சீனிவாசனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.