
நில உரிமையாளர்கள் அனைவருமே கட்டாயமாக வைத்திருக்க வேண்டியது பட்டா. வருவாய்துறை சார்பாக இந்த ஆவணமானது வழங்கப்படுகிறது. இதில் நில உரிமையாளரின் பெயர், நிலம் வகை, நிலம் அமைந்துள்ள பகுதி, சர்வே எண் போன்ற முக்கியமான தகவல்கள் இருக்கும். கூட்டு பட்டாவிலிருந்து தனிப்பட்ட பட்டாவாக பிரிக்க குறிப்பிட்ட நிலத்தின் உரிமையாளராக இருக்க வேண்டும். நிலத்தை பகிர்ந்து தனியாக பட்டா பெறுவதற்கு பிற உரிமையாளர்கள் ஒப்புதல் வேண்டும்.
இதில் சிக்கல் எதுவும் இல்லாமல் இருக்க வேண்டும். தனிப்பட்ட பட்டா பெற விண்ணப்பிப்பதற்கு தற்போதைய கூட்டு பட்டா, முந்தைய பட்டா நகல், பரிசளிப்பு ஆவணம், விற்பனை சான்று, பகிர்வு உடன்படிக்கை, உள்ளிட்ட ஆவணங்கள் தேவை. தனிப்பட்ட பட்டா பெற விண்ணப்பதாரர் தங்கள் ஊர் தாசில்தார் அலுவலகத்திற்கு சென்று பட்டா பிரிப்பு விண்ணப்பத்தை நிரப்பி கொடுக்க வேண்டும்.
சரியான ஆவணங்களை சமர்ப்பித்த பிறகு நிலத்தை அதிகாரிகள் ஆய்வு செய்து உறுதி செய்வார்கள். தமிழ்நாடு இ-சர்வீஸ் இணையதளத்தில் “பட்டா டிரான்ஸ்பர்” என்ற விருப்பத்தை தேர்வு செய்து தேவையான ஆவணங்களை ஸ்கேன் செய்து பதிவேற்ற வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பத்தின் நிலையை கண்காணித்துக் கொள்ளலாம். விண்ணப்பித்த பிறகு நிலம் சம்பந்தபட்ட பண உரிமை சிக்கல்கள் இல்லாவிட்டால் 30 முதல் 60 நாட்களுக்குள் தனி பட்டா கிடைத்துவிடும். கூட்டு உரிமையாளர்களின் ஒப்புதல் அளிக்கவில்லை என்றால் நீதிமன்றம் வழியாக தனி பட்டா பெற முடியும்.