
தென்காசி மாவட்டத்தில் உள்ள கருத்தப்பிள்ளையூர் அந்தோனியார் தெருவில் இருதயராஜ்(45) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அச்சங்குளம்- கள்ளத்திகுளம் பகுதியில் மீன் பாசி குத்தகைக்கு எடுத்துள்ளார். இரவு நேரம் இருதயராஜ் குளத்துக்கரையில் காவல் பணியில் ஈடுபடுவது வழக்கம். நேற்று இரவு இருதயராஜ் குளத்துக்கரையில் இருந்தபோது அங்கு வந்த மர்ம நபர்கள் அவரை அரிவாளால் தாக்கியுள்ளனர். மேலும் இருதயராஜின் தலையை துண்டித்து கொடூரமாக கொலை செய்துள்ளனர்.
இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இருதயராஜின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் சொத்து பிரச்சனை காரணமாக கொலை சம்பவம் நடந்தது தெரியவந்தது. இதனால் போலீசார் தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.