நீலகிரி மாவட்டத்திலுள்ள எலிகள் பகுதியில் மோகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஷோபா என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகளும், ஒரு மகனும் இருக்கின்றனர். கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு கணவன் மனைவி இடையே குடும்ப பிரச்சனை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மோகன் மட்டும் முத்தரை பகுதியில் தனியாக வசித்து வந்தார். அதன் பிறகு கணவன் மனைவி இருவரும் சமாதானம் அடைந்து கடந்த ஒரு மாதமாக சேர்ந்து வாழ்ந்தனர்.

இந்த நிலையில் ஷோபா தன்னுடன் இருந்த மோகனின் சகோதரியை அவர் திருமணமான வீட்டுக்கு சென்று வாழுமாறும், இந்த வீட்டில் இருக்க வேண்டாம் எனவும் கூறியதாக தெரிகிறது. இதனால் மோகனுக்கும் ஷோபாவுக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் கோபம் அடைந்த மோகன் வீட்டிலிருந்த கத்தியால் சோபாவின் கழுத்தில் குத்தினார். இதில் படுகாயமடைந்த ஷோபா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து அறிந்த போலீசார் அங்கு சென்று ஷோபாவின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் மோகனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.