நிலவை ஆய்வு செய்வதற்காக, இந்தியா சார்பாக சந்திரயான் 3 விண்கலம் இன்று  மதியம் 2 மணி 35 மணிக்கு ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து விண்ணில் செலுத்தப்பட உள்ளது. வரலாற்றுச் சிறப்பு மிக்க தருணத்தை, வெற்றிகரமாக மாற்றுவதற்காக, இஸ்ரோ விஞ்ஞானிகள் தயாராக உள்ளனர். ‘எல்.வி.எம்.3 எம்-4’ ராக்கெட்டில் விண்கலத்தின் அனைத்து பாகங்களும் முழுமையாக பொருத்தப்பட்டுவுள்ளன. இதனை தொடர்ந்து நிலவுக்கு அனுப்பப்படும் இந்தியாவின் 3-வது விண்கலமான ‘சந்திரயான் -3’, விண்வெளி ஆய்வில் இந்தியாவை அடுத்தக் கட்டத்திற்கு எடுத்து செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இன்று விண்ணில் ஏவப்படும் சந்திரயான் -3 பூமியின் நீள்வட்டப்பாதையில் படிப்படியாக பயணிக்க 40 நாட்கள் எடுத்துக்கொள்ளும். சந்திரயான் -3 பயணம் 10 கட்டங்களாகத் திட்டமிடப்பட்டுள்ளது. இதில், நிலாவில் விண்கலம் தரையிறக்கும் 9-வது கட்ட செயல்முறை எடுத்துக்கொள்ளும் நேரம், வெறும் 15 நிமிடங்கள் மட்டுமே. ஆனால், அந்தப் 15 நிமிடங்களில்தான் இந்த முழு திட்டமும் வெற்றி பெறுமா இல்லையா என்பதே அடங்கியுள்ளது