
சென்னை வியாசர்பாடியில் நாகராஜன்(82) சரோஜினி பாய்(78) தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இவர்களுக்கு 2 மகள்கள் இருக்கிறார்கள். இதில் நாகராஜன் ஓய்வு பெற்ற ரயில்வே அதிகாரி ஆவார். இவரது மனைவி சரோஜினி பாய் ஓய்வு பெற்ற ஆசிரியர் ஆவார். இவர்கள் இரண்டு பேரும் தங்களுடைய வீட்டில் தனியாக வசித்து வந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு நேரத்தில் தூங்கிக் கொண்டிருந்த நாகராஜன் தன்னுடைய அருகில் படுத்திருந்த மனைவியை காணவில்லை என வீடு முழுவதும் தேடினார்.
இந்நிலையில் சரோஜினி பாய் வீட்டின் முன் பகுதியில் மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். உடனே பதறிப்போன நாகேந்திரன் தனது மகள் கலைவாணிக்கு செல்போன் மூலம் தகவல் தெரிவித்தார். தகவலை அறிந்த கலைவாணி வீட்டிற்கு வந்து பார்த்தபோது சரோஜினி கழுத்தில் சார்ஜர் ஒயர் கட்டப்பட்டு காதில் இருந்த தங்க கம்மல் இல்லாமல் இருந்தது . உடனடியாக அவர்கள் சரோஜினி பாயை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறிவிட்டனர். பின்னர் இது தொடர்பாக அவருடைய மகள் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இவர் கொடுத்த புகாரின் பேரில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.