கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள திம்மாபுரம் கிராமத்தில் நிர்மலா என்பவர் வசித்து வந்தார். இவருக்கு இரண்டு மகள்கள் இருக்கின்றனர். கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு நிர்மலாவின் கணவர் உயிரிழந்தார். நிர்மலா கரவை மாட்டை வைத்து பால் வியாபாரம் செய்து வந்தார். நேற்று முன்தினம் பால் ஊற்றுவதற்காக அருகில் இருக்கும் பால் சேகரிப்பு மையத்திற்கு சென்றுள்ளார். நீண்ட நேரமாகியும் அவர் வீட்டிற்கு வராததால் குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் அவரை தேடிப் பார்த்தனர்.

அப்போது அருகில் இருக்கும் சோளக்காட்டில் ஒரு பெண் இறந்து கிடப்பதாக தகவல் கிடைத்ததால் உறவினர்கள் அங்கு சென்று பார்த்தனர். அங்கு நிர்மலா சடலமாக கிடந்ததை கண்டு உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவம் இடத்திற்கு சென்று நிர்மலாவின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.