
இந்து சமய அறநிலையத்துறை சார்பாக 30 ஜோடிகளுக்கு திருமண விழா இன்று நடத்தப்பட்டது. அதில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் சேகர் பாபு, சுப்பிரமணியன் ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது மேடையில் பேசிய அமைச்சர் சேகர்பாபு, கழக ஆட்சியில் இரு வர்ணக் கொடி தமிழ்நாட்டில் பறக்கும் போது மகளிர் வாழ்வாதாரம் உயர்கின்றது. கடந்த பத்து ஆண்டுகால ஆட்சியில் இந்த திட்டம் மூடு விழா கண்டது. முதல்வர் பதவியேற்ற பிறகு தான் 2022 ஆம் ஆண்டில் முதல் கட்டமாக 500 ஜோடிகளுக்கு கட்டணம் இல்லாமல் திருமணம் நடத்த உத்தரவிட்டார். இதுவரை தமிழகத்தில் 1800 தம்பதிகளுக்கு அறநிலையத்துறை சார்பாக இலவச திருமணம் நடத்தப்பட்டுள்ளது.
திமுக ஆட்சி ஏற்பட்ட பிறகு தான் திருக்கோவில்களில் துபா ஆராதனை, எங்கெங்கும் மணியோசை, எங்கெங்கும் தேவாரம் திரு ஓசை, மகிழ்ச்சியோடு இறையன்பர்கள் இருக்கிறார்கள். இது ஒரு ஆன்மீக ஆட்சி என்பதில் நாங்கள் பெருமிதம் கொள்கின்றோம். இந்த ஆட்சியை வீழ்த்துவதற்கு பல்வேறு வகையில் வியூகங்கள் திரை மறைவிலும் வெளி உலகிலும் நடந்து கொண்டிருக்கின்றது.
ஒருபுறம் எங்கு திரும்பினாலும் அப்பா அப்பா என்ற குரல் எங்கள் ஆருயிர் தளபதியை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. மறுபுறம் அண்ணா அண்ணா என்ற குரல் துணை முதல்வரை நோக்கி திரும்பிக் கொண்டிருக்கின்றது. இந்த இரண்டு கூட்டணிகளும் ஒருங்கிணைகின்ற போது 2026 ஆம் ஆண்டு மாண்புமிகு தமிழக முதல்வர் சொல்லியது போல 200 தொகுதிகளை திராவிட முன்னேற்றக் கழகம் கைப்பற்றும் என்று அமைச்சர் சேகர்பாபு பேசியுள்ளார்.