
தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய். இவர் கடந்த பிப்ரவரியில் அரசியல் கட்சி தொடர்பான அறிவிப்பை வெளியிட்ட நிலையில் அடுத்து வரும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுகிறார். இவர் திமுகவை அரசியல் எதிரியாகவும் பாஜகவை கொள்கை எதிரியாகவும் அறிவித்துள்ளார். அதன் பிறகு மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு கேள்விக்குறியாகியுள்ளதாக விஜய் குற்றம் சாட்டி திமுக அரசுக்கு அவ்வப்போது நடக்கும் சம்பவங்களுக்கு எதிராக கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிடுவார். அந்த வகையில் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து தற்போது தமிழக பெண்களுக்காக விஜய் தான் கைப்பட ஒரு கடிதத்தை எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் கூறப்பட்டிருப்பதாவது, கல்வி வளாகம் முதற்கொண்டு ஒவ்வொரு நாளும் தமிழகத்தில் என் அருமை தாய்மார்கள், தங்கைகள், பெண் குழந்தைகள் என அனைத்து தரப்பு பெண்களுக்கு எதிராக நடக்கும் சமூக அவலங்கள், சட்டம் ஒழுங்கு சீர்கேடு அவலங்கள், பாலியல் வன்கொடுமைகள் என்ற பல்வேறு குற்றங்களை கண்டு உங்கள் அண்ணனாக மன அழுத்தத்திற்கும் சொல்ல முடியாத துயரத்திற்கும் வேதனைக்கும் ஆளாகிறேன்.
உங்கள் பாதுகாப்பை யாரிடம் கேட்பது. நம்மை ஆளும் ஆட்சியாளர்களிடம் எத்தனை முறை கேட்டாலும் எந்த பயனும் இல்லை என்பது தெரிந்தது. அதற்காகத்தான் இந்த கடிதம். எல்லா சூழ்நிலைகளிலும் நிச்சயம் நான் உங்களுடன் உறுதியாக நிற்பேன். அண்ணனாகவும் அரணாகவும். எனவே எதைப் பற்றியும் கவலை கொள்ளாமல் கல்வியில் கவனம் செலுத்துங்கள், பாதுகாப்பான தமிழகத்தை படைத்தே தீருவோம். மேலும் இந்த ஆழமான உத்திரவாதத்தை நாம் அனைவரும் இணைந்து சாத்தியப்படுத்துவோம் என்று எழுதியுள்ளார்.