தமிழ்நாடு பட்ஜெட் 2023-24 இன்று காலை 10 மணி அளவில் சட்டப்பேரவையில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜனால் தாக்கல் செய்யப்பட்டது. பட்ஜெட் தாக்கலின் போது அமைச்சர் பிடிஆர் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். அந்த வகையில் தமிழ்நாட்டின் கிராமப்புற பகுதிகளில் 10,000 குளங்கள் மற்றும் ஊரணிகள் 800 கோடி செலவில் புதுப்பிக்கப்படும் என்றார். அதன் பிறகு ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தின் இரண்டாம் கட்ட பணிகளுக்காக ரூ. 7,145 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றார். மேலும் பெண் தொழில் முனைவோருக்கு புத் தொழில் திட்டம் மற்றும் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு 30,000 கோடி ரூபாய் வங்கி கடன் வழங்குவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக கூறினார்.