அதிகமாக கட்டணம் வசூலிக்கும் தியேட்டர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தியேட்டர்களில் அதிக அளவில் கட்டணம் வசூல் செய்யப்படுகிறதா? என்பதை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்றும் தமிழர் அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழ்நாட்டில் பண்டிகை காலங்களில் புதிய படங்கள் வெளியாகும் பொழுது தியேட்டர்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்கபடுகிறது. எனவே அந்த தியேட்டர்கள் மீது நடவடிக்கை எடுக்க கூறி சென்னை பெரம்பூரை சேர்ந்த ஜி. தேவராஜன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் 2017 ஆம் வருடம் வழக்கு ஒன்று தொடுத்திருந்தார்.

அதில், கூடுதல் கட்டணம் வசூலிக்கும் தியேட்டர்களில் சிறப்பு குழு அமைத்து கண்காணிக்கப்பட வேண்டும் என்ற உயர்நீதிமன்ற உத்தரவுகளை சுட்டிக்காட்டி அரசு நிர்ணயத்தை கட்டணத்தை விட கூடுதலாக வசூலித்த கட்டணத்தை திருப்பி கொடுக்க உத்தரவிட வேண்டும் என்றும் கூறினார். இந்த வழக்கில் தமிழக அரசின் வருவாய் நிர்வாக ஆணையர் தாக்கல் செய்த பதில் மனுவில் கூடுதல் கட்டணமாக வசூலித்த தியேட்டர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தமிழகம் முழுவதும் பல்வேறு தியேட்டர்களில் சோதனை நடத்தப்பட்டு கூடுதல் கட்டணம் வசூலித்த தியேட்டர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக கூறி பட்டியல் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மேலும் இந்த வழக்கு விசாரித்த நீதிபதி அரசு நிர்ணயம் செய்த கட்டணத்தை விட அதிக கட்டணம் வசூலிக்கும் தியேட்டர்களுக்கு எதிராக உயர் நீதிமன்றம் ஏற்கனவே பிறப்பித்த உத்தரவுகள் தொடரும் என்றும், அதே கட்டணம் வசூலிப்பது தொடர்பாக அரசு கண்காணிப்பை தொடர வேண்டும் என்றும் கூடுதல் கட்டணம் வசூலிக்கும் திரையரங்குகளின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்தது வழக்கை முடித்து வைத்தார்.