தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை மற்றும் எளிய மக்களுக்கு அரிசி, பருப்பு மற்றும் எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசியமான பொருட்கள் மலிவு விலையில் வழங்கப்படுகிறது. ரேஷன் கார்டுகள் மூலமாக கோடிக்கணக்கான மக்கள் பயன்பெறுகிறார்கள். இந்நிலையில் ரேஷன் கடைகளில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அமுதம் பல்பொருள் விற்பனை அங்காடி மூலம் 499 ரூபாய் விலையில் 15 மளிகை பொருட்கள் கிடைக்கும் என்றும், இதனை பொதுமக்கள் தங்கு தடை இன்றி பெற்றுக் கொள்ளலாம் என்று முன்னதாக அமைச்சர் அறிவித்திருந்தார். இதைத்தொடர்ந்து தற்போது ஒரு அறிவிப்பையும் அமைச்சர் சக்கராபாணி வெளியிட்டுள்ளார். அதாவது நியாய விலை கடைகளில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தரமான பொருட்களை பொதுமக்களுக்கு வழங்க வேண்டும் என்று அவர் உத்தரவிட்டுள்ளார்.

ஒருவேளை ரேஷன் கடைகளில் தரமான பொருட்கள் வினியோகிக்கவில்லை என்று புகார் வந்தால் சம்பந்தப்பட்ட ஊழியர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் எச்சரித்துள்ளார். அதன் பிறகு அனைத்து நியாயவிலை கடைகளிலும் அரிசி, துவரம் பருப்பு, சர்க்கரை, கோதுமை உள்ளிட்ட அத்யாவசிய பொருட்களை இருப்பு வைத்திருக்க வேண்டும் எனவும், இந்த பொருள்கள் வடகிழக்கு பருவமழையால் சேதம் அடையாதவாறு பாதுகாத்துக் கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தீபாவளி பண்டிகையில் பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருள்கள், தங்கு தடை இன்றி கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் முன்னதாக தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரேஷன் கடை ஊழியர்களுக்கு 20% வரை அதாவது ஒரு ஊழியருக்கு 7000 ரூபாய் வரையில் ‌ அரசு போனஸ் அறிவித்தது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.