விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திண்டிவனம் வண்ணாரப்பேட்டை பகுதியில் சூர்யா(24) என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது நண்பரான மணிகண்டன் என்பவருடன் இணைந்து திண்டிவனம் செஞ்சி பேருந்து நிலையம் அருகே இருக்கும் டாஸ்மாக் கடையில் மது குடித்தனர். அதன் பிறகு நள்ளிரவில் ஒரு நண்பரை பார்த்துவிட்டு மீண்டும் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தனர்.

இந்த நிலையில் அனந்தமங்கலம் அருகே சென்றபோது பெட்ரோல் இல்லாமல் பாதி வழியில் மோட்டார் சைக்கிள் நின்றுவிட்டது. இதனால் அவர்கள் வேறு ஒரு மோட்டார் சைக்கிளில் வந்த நபரை வழிமறித்து செல்போன் மற்றும் பணத்தை கொள்ளையடித்து விட்டு அங்கிருந்து தப்பி ஓட முயற்சி செய்தனர்.

இருவரும் வயல்வெளிகள் வழியாக ஓடிய போது ஓலக்கூர் எல்லையில் ரமேஷ் என்பவர் நிலத்தில் அமைக்கப்பட்டிருந்த மின்வேலியில் சிக்கி சூர்யா உயிரிழந்தார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த மணிகண்டன் அங்கிருந்து தப்பி ஓடி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். அதன்படி சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் சூர்யாவின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.