ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நாஹர்கர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் நடந்த ஒரு பயங்கர விபத்து தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது அந்த வழியாக சாலையில் வேகமாக வந்த ஒரு லக்சரி கார் திடீரென எதிரே வந்த இருசக்கர வாகனங்கள் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது. இந்த விபத்தில் சாலையில் நடந்து சென்றவர்கள் மற்றும் இருசக்கர வாகன ஓட்டிகள் என 6-க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்தனர். இந்த தொடர்பான சிசிடிவி வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் போலீசார் வழக்கு பதிவு செய்து உஸ்மான் என்ற அந்த கார் ஓட்டுநரை கைது செய்துள்ளனர். அவர் ஒரு இரும்பு கட்டில் தயாரிக்கும் தொழிற்சாலை நடத்துபவர் என்பது தெரியவந்துள்ளது.

 

விபத்து நடந்த போது இவர் மது போதையில் இருந்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகப்படுவதால் தற்போது அவருக்கு மருத்துவ பரிசோதனையும் செய்தனர். இந்நிலையில் இந்த கோர விபத்தில் கன்வர் என்று 50 வயது நபரும், அவதேஷ் பாரிக் என்ற 37 வயது நபரும் உயிரிழந்த நிலையில் பலத்த காயங்களுடன் சிகிச்சை பெற்று வந்த வீரேந்திர சிங் என்ற 48 வயது நபரும் உயிரிழந்துள்ளார். மேலும் மோனேஷ் சோனி (37), மொஹம்மட் ஜலாலுதீன் (44), தீபிகா ஷைனி (17), விஜயநாராயணன் (65), ஜேபுந்னிஷா (50), அம்பிகா (24) ஆகியோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இவர்களில் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை உயரக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.