திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கூடங்குளம் பகுதியில் நேற்று மாலை 6.11 மணிக்கு லேசான நில அதிர்வு ஏற்பட்டதாக தகவல் பரவியது. ஆனால் அதிகாரிகள் அத்தகைய நில அதிர்வு எதுவும் உணரப்படவில்லை என கூறியுள்ளனர். கூடங்குளம் அருகே, இருக்கும் இருக்கன்துறை, நக்கநேரி பகுதியில் கல்குவாரிகள் அமைந்துள்ளது. அங்கு பாறைகளை வெடி வைத்து தகர்க்கும் போது ஏற்பட்ட அதிர்வாக இருக்கலாம் என கூறப்படுகிறது. இதுகுறித்து திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் கூறியதாவது, நில அதிர்வு தகவலை நம்ப வேண்டாம்.

கடந்த 30 நாட்களில் எந்தவித நில அதிர்வும் உணரப்படவில்லை. அந்த வதந்தியை மக்கள் யாரும் நம்பி அச்சப்பட வேண்டாம் என கூறியுள்ளார். மறுபுறம் கன்னியாகுமரி பகுதியில் இருக்கும் விவேகானந்தபுரம் குண்டல், கொட்டாரம் உள்ளிட்ட பகுதிகளில் லேசான நில அதிர்வு உணரப்பட்டதாக கூறப்பட்டது. கன்னியாகுமரியில் நில அதிர்வு ஏற்பட்டதாக வெளியான தகவல் குறித்து மாவட்ட அதிகாரிகள் தரப்பிலிருந்து எந்த கருத்தும் வெளியாகவில்லை.