சேலம் மாவட்டத்தில் உள்ள புதுச்சாம்பள்ளி பகுதியில் சக்திவேல் என்பவர் வசித்து வருகிறார். இவர் சேலம் நீதிமன்ற வளாகத்தில் கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில் சக்திவேல் கருப்பூர் வெள்ளாளபட்டியை சேர்ந்த ஓபிஎஸ் அணி ஓமலூர் சட்டமன்ற தொகுதி அமைப்பாளர் மணிகண்டன் என்பவரை சந்தித்து தனது மனைவி மற்றும் உறவினர்களுக்கு அரசு வேலை தருமாறு கேட்டார். இதற்காக கடந்த 2023-ஆம் ஆண்டு ஜூன் மாதம் 2.50 லட்சம் ரூபாய் பணத்தை கொடுத்தார். இதனையடுத்து மணிகண்டன் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கிளார்க் பதவிக்கான பணி நியமன அணையை கொடுத்தார்.

அந்த பணியில் சேர சென்றபோது அது போலியானது என்பது தெரிய வந்தது. இதனால் சக்திவேல் மணிகண்டனிடம் தான் கொடுத்த பணத்தை திருப்பி தருமாறு கேட்டார். மணிகண்டன் பல்வேறு தவணைகளாக 2 லட்சத்து 5 ஆயிரம் ரூபாய் பணத்தை கொடுத்தார். மீதுமுள்ள பணத்தை வழங்க தாமதமானதால் சக்திவேல் கடந்த 2024-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் மணிகண்டனை தேடி வந்தனர். நேற்று தலைமறைவாக இருந்த மணிகண்டனை போலீசார் அதிரடியாக கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.