சென்ற 2016ம் வருடம் பண மதிப்பிழப்பு நடவடிக்கை அறிவிக்கப்பட்டபோது கள்ளநோட்டுகள், கருப்பு பணம், பயங்கரவாதம் போன்றவற்றை ஒழிப்பதே இதன் நோக்கம் என அறிவிக்கப்பட்டது. எனினும் கள்ளநோட்டு புழக்கமானது அதிகரித்து வருவதாக தெரியவந்து உள்ளது. இதுகுறித்து தேசிய குற்ற கட்டுப்பாட்டு பிரிவு கூறியதாவது “சென்ற 2016ம் வருடத்திலிருந்து நாடு முழுவதும் மொத்தம் ரூபாய்.245 கோடியே 33 லட்சம் முகமதிப்பு கொண்ட கள்ளநோட்டுகள் பிடிபட்டுள்ளது.

அதிகபட்சம் கடந்த 2020ம் வருடம் ரூ.92 கோடியே 17 லட்சம் மதிப்புள்ள கள்ளநோட்டுகள் சிக்கியது. 2017ம் வருடம் ரூபாய்.55 கோடி மதிப்புள்ள நோட்டுகளும், 2021-ஆம் ஆண்டு ரூபாய்.20 கோடியே 39 லட்சம் மதிப்பு நோட்டுகளும், 2016ம் ஆண்டு ரூ.15 கோடியே 92 லட்சம் மதிப்பு நோட்டுகளும் கைப்பற்றப்பட்டது” என்று அதில் கூறப்பட்டுள்ளது. அதேபோன்று ரிசர்வ் வங்கியின் வருடாந்திர அறிக்கை படி, 2021-2022 நிதியாண்டில் வங்கிகளில் கண்டுபிடிக்கப்பட்ட புது 500 ரூபாய் நோட்டுகளின் எண்ணிக்கையானது இரு மடங்காக, அதாவது 79 ஆயிரத்து 669 ஆக அதிகரித்துள்ளது. 2,000 ரூபாய் கள்ளநோட்டுகள் எண்ணிக்கையானது 13,604 ஆகும். இது முந்தைய நிதி ஆண்டை விட 54% அதிகம் ஆகும்.

அத்துடன் அனைத்து மதிப்பு உள்ள கள்ளநோட்டுகளின் எண்ணிக்கையானது 2,30,971 ஆக அதிகரித்து உள்ளது. இது முந்தைய நிதியாண்டில் 2 லட்சத்து 8 ஆயிரமாக இருந்தது. கடந்த 2019-2020 நிதியாண்டில் 2 லட்சத்து 96 ஆயிரத்து 695 கள்ளநோட்டுகள் பிடிபட்டது. ரூ.10, ரூ.20, ரூ.200, ரூ.500, ரூ.2,000 என பல வகையான மதிப்புள்ள கள்ளநோட்டுகளும் சிக்கியது.