கேரளா மாநிலத்தில் உள்ள கொச்சியில் சுங்கத்துறை கூடுதல் ஆணையாளராக மனிஷ் விஜய் என்பவர் வேலை பார்க்கிறார். ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த மனிஷ் விஜய்க்கு திருமணம் ஆகவில்லை. இவர் சுங்கத்துறை அதிகாரிகள் குடியிருப்பில் வசித்து வந்தார். கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு விஜயின் தாய் சகுந்தலா, அக்கா ஷாலினி ஆகியோர் கொச்சிக்கு வந்தனர்.

கடந்த 10 நாட்களுக்கு முன்பு ஒரு வாரம் விடுமுறையில் ஊருக்கு செல்வதாக விஜய் தனது அலுவலகத்தில் கூறியுள்ளார். ஆனால் விடுமுறை முடிந்த பிறகும் அவர் அலுவலகத்திற்கு வராததால் சந்தேகம் அடைந்த ஊழியர்கள் குடியிருப்புக்கு சென்று பார்த்தனர். அங்கு துர்நாற்றம் வீசியதால் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்படி சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர்.

அப்போது மனிஷ் விஜய் ஒரு அறையிலும், ஷாலினி மற்றொரு அறையிலும் தூக்கில் இறந்து கிடந்ததை கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். மற்றொரு அறையில் சகுந்தலா இறந்து கிடந்தார். அவரது உடல் மீது பூக்கள் வைக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து அழுகிய நிலையில் இருந்த உடல்களை மீட்டு போலீசார் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விவகாரம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.